தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புரையோடிய புற்று நோய்





காலில் செருப்பின்றி
மர நிழல்களை குடைகளாக்கி
பள்ளிச் சென்ற காலமெல்லாம்
பழங்கதையாகிவிட்டது

வணிகமய வாழ்வில்
நிசான் காரில்
வாழ்க்கைப் பறக்கிறது

அன்று
தெருவோர ஏழைக்கு
மதிய உணவை
மனமுவந்து அளித்ததும்
மற்றவர்க்கு உதவும்போது
ஏற்படும் மகிழ்வும்
இயல்பாய் இருந்தது

இன்றோ
இரக்கத்தோடு
உறக்கத்தையும் மறந்த
இலக்கில்லா ஓட்டமொன்று
எல்லாவற்றையும் தொலைத்தது

ஜோடிக்கப்பட்ட மேடையில்
ஆடம்பரப் பேச்சோடு
முதியோருக்கு நிவாரணம்
சொந்தத் தாயும் தந்தையுமோ
முதியோர் இல்லத்தில்

இப்படி
ஏய்த்துப் பிழைப்பவர்க்கே
சமூக அங்கீகாரமென்றால்
நம்முடைய வளர்ச்சி
புரையோடிப் போன
புற்று நோயை ஒக்கும்!


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

வேர்களில் விஷம் வார்த்தால்....



விண் வெளியை உழுது
வயல்களாக்கி
பெருங்கடல்களை தூர்த்து
மனைகளாக்கி
பெருமைப்படலாம்

ஆனால்
முன்னேற்றத்தின்
மறு பக்கத்தில்
பண்பை இழந்த மனிதம்
பரிதவித்துக் கொண்டிருக்கிறது

நட்பு கருணை ஈகை
ஒழுக்கம் உண்மை அன்பு
இவையெல்லாம்
காலாவதியான சொற்களாய்
அறிவிக்கப்பட்டு

காமம் துரோகம் களவு
கொலை கொள்ளை ஏய்த்தல்
இவையே வளர்ச்சியின் வழியாய்
முன்மொழியப்படுகிறது

பண்பில்லா வளர்ச்சி
சாக்கடையில் கலந்த
சந்தனமாகிவிட்டது

வேர்களுக்கு
விஷம் வார்த்தால்
விழுதுகள் என்ன
அமுதமாப் பொழியும் ?

சனி, 20 பிப்ரவரி, 2016

உணர்வது எப்போது




     

                                     உணர்வது எப்போது



தன் வயிறு காய்ந்தாலும்
இயலாதவர்க்கு
இயன்றதை செய்யும்
எம் தமிழர் பண்பாடு 
எங்கே போனது

குடும்பங்களை இணைத்து
குதுகலித்தத் திருமணங்கள்
நீதி மன்ற வாயிலில்
நித்தம் மிதிபடுவதேன்

பசுவிற்கும் புறாவிற்கும்
நீதி தந்த எம் நெறிமுறை
பணத்திற்குள் கரைந்து
பாழானது எவ்வாறு

வள்ளலாரையே
சந்தேகித்த ஆன்மீகம்
போலிச் சாமியார்களுக்கு
புகலிடமானது ஏன்

ஏழைக்கு எழுத்தறிவித்தல்
இறைப் பணியே என்ற நாம்
கல்வியை காசாக்கும்
கலாச்சாரத்தை எங்கு கற்றோம்

 பண்பில்லா முன்னேற்றம்
பம்பர வாழ்க்கையாகி
தள்ளாடிச் சுற்றி
தானே கவிழும் என்பதை
என்று நாம் உணரப்போகிறோம்

திங்கள், 15 பிப்ரவரி, 2016

அந்நிய அடிமை





            வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு   செய்யப்பட்டது

செஸ் விளையாட்டில்தான்
உனக்கும் எனக்குமான
முதல் அறிமுகம்
அந்தக்கால ஆண்மைமிக்கத்
திரை கதாநாயகர்கள்
உன் மீதேறி கம்பீரமாய்
இசைத்த பாடல்கள்மீது
எனக்கு அளவற்ற காதல்
கிண்டி மைதானத்தில்
நீ நொண்டி அடித்து பலரை
 ஓட்டாண்டியாய் ஆக்கியதால்
ஜெமினி பாலம் ஓரமாய்
நீயும் சிலை வடிவானாய்
ஆனாலும் எனக்கொன்று
புரியவில்லை
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்
ஓடி விளையாடும்
எங்கள் ஜல்லிகட்டு காளைகள்மீது
எங்களவர் காட்டும் அக்கரை
இராணுவத்திலும் காவல்துறையிலும்
வீரர்களை வேதனையோடு சுமப்பதோடு
விருந்தினர் முன்னே நடனமும் ஆடும்
உன் மீது ஏன் பிறப்பதில்லை
ஓ    நீ
அந்நிய தேசத்திலிருந்து வந்த
அடிமை என்பதாலா

சனி, 13 பிப்ரவரி, 2016

எங்களை அறியவில்லை



            வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு                                            செய்யப்பட்டது

ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை
அங்காடித் தெருக்கள் தோறும்
கையேந்த வைத்த
கருணையற்றவர்கள் நாங்கள்

அன்பிற்கு நீ தந்த இசைவினை
அடிமை சாசனமென்று எண்ணி
உன்னை அடக்கி விட்டதாய்
போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்

உன் பலம் உனக்குத் தெரியாதென
நிச்சயமாய் நம்பும் நாங்கள்
எங்கள் பலவீனங்களை
என்றுமுணர்ந்ததில்லை

அதனால்தான்
இயற்கையை வென்றுவிட்டோமென்ற
எங்கள் இறுமாப்பு
கொட்டிய மழையில்
முற்றிலுமாய் கரைந்தது
பண்பற்ற எங்கள் செய்கைகளால்
நீ பதற்றமடையும் பொழுதெல்லாம்
மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து
மயக்க ஊசிப் போடுகிறோம்
ஆனால் நாங்களோ
மத வெறியுடனேத் திரிகிறோம்
மயக்க ஊசிப்போட மட்டும்
மருத்துவர் எவருமில்லை!


வியாழன், 11 பிப்ரவரி, 2016

என்னவாக இருக்கும்



                    வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது



பாரம்மா இங்கு வந்து
பாசத்துடன் யாரோ ஒருவர்
நம் படத்தை வரைந்து
வாசகங்கள் எழுதுமுன்
வந்த மழை காரணமாய்
ஓடிவிட்டார்போலும்!

பாசமென்றா நினைத்தாய்
பைத்தியக்காரி
ஆடுகள்தான் இங்கு
சிறுநீர் கழிக்கும் எனும்
எரிச்சல் எச்சரிக்கை
செய்ய நினைத்திருப்பார்கள்

அல்லது
படம் வரைந்து
பிச்சை எடுக்கும்
அந்தக் கிழவரின்
கைவண்ணமாய்
இருக்கக்கூடும்

நாளைய தேர்தலில்
நம் சின்னத்தில்
போட்டியிடும் வேட்பாளர்
சுவரில் முன்பதிவு பெற
தீட்டிய சித்திரமாய்
இருக்கலாம்

இல்லையெனில்
விரைவில் திறக்க இருக்கும்
கறிக்கடையின்
விளம்பரமாயும் இருக்கலாம்
இங்கிருப்பது நல்லதல்ல
வா வா
விரைந்து செல்லலாம்

மாயப்போராட்டம்












உன்னை நோக்கி
நாங்கள் வரும்போது
நீ ஓடுவதும்
எம்மை நோக்கி
நீ வரும்போது
நாங்கள் ஓடுவதும்
இது என்ன
\மாயப் போராட்டம்

வானுக்கு சென்ற நீ
வருவாயா என
எத்தனை ஆண்டுகள்
ஏங்கியிருக்கிறோம்
இன்று இப்படி
ஏரளாமாய் வந்து
போகமாட்டாயா என
புலம்ப வைத்தது ஏன்

கெடுப்பதும்
கெட்டாரை வாழவைப்பதும்
நீயே என்றான்
வான்புகழ் வள்ளுவன்
கெடுத்துவிட்டாய்
எப்பொழுது
வாழ வைப்பாய்?






செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நாளைய விடியல்






(   ((    
              (வல்லமை மின் இதழில் பாராட்டிற்குரிய கவிதையாக தேர்வு                
                                      செய்யப்பட்ட கவிதை)


பத்துப் பாட்டு
எட்டுத் தொகை
பதினெண் கீழ்கணக்கென
ஒரு கோடி
இலக்கியங்கள் இருந்தும்
மம்மி டாடியிலேயே
மகிழ்கிறது நம் இனம்

குழலினிது
யாழினிதென்பர்
தம் மக்கள்
ஆங்கிலம் பேச கேளாதார்
இதுவே
இன்றையக் குறளாய்
எங்கும் ஒலிக்கிறது

வாவ் என்ற ஒலியே
நம்
வாழ்வின் தரத்தை
நிர்ணயிக்கிறது

கத்திரிக்காயை
ப்ரிஞ்ஜால் என்பதே
அறிவின் அடையாளமாய்
அங்கிகரீக்கப்படுகிறது

அன்னை மொழியில் பேச
அவமானப்படும்
ஒரே இனமென
உலகெங்கும் நாம்
அறியப்படுகிறோம்

இந்த இழிநிலைகளை மாற்ற 
உயிரெழுத்துப் பழகும்
இளந் தளிரே
உன்னால் மட்டுமே முடியும்


மொழி என்பது
இனத்தின் இதயம்
இதயம் துறந்த இனம்
பிணமொக்கும் என்பதை
நம்மவருக்கு
உரக்க சொல்
நாளைய விடியலாவது
நன்மை பயக்கட்டும்!