தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 மார்ச், 2016

உன்னால் உயரும்






                                       

வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை


புலியை முறத்தால் விரட்டிய
புறநானுற்றுப் பெண் கூட
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
சான்றோனாக்குதல் தந்தையின் கடனே என
ஆணாதிக்க சிந்தனைக்குள்
அமிழ்ந்து போனாள்

போற்றா ஒழுக்கம் கொண்ட கோவலனைத்
தூற்றாது தலையிலேற்றித் திரிந்தாள் கண்ணகி
அடக்குதலும் அடுக்களையில்
முடக்குதலுமே தம் பணியென
எம் தலைமுறையினர்
சிறையிட்டுச் சிரித்தனர்

என் அன்புப் பேத்தியே
மாற்றங்கள் மலருகின்ற
மகத்தான தருணமிது
சமுதாயச் சன்னல்கள்
மெல்லத் திறந்து
முடங்கிக் கிடந்த நம்மீது
விடுதலை வெளிச்சத்தைப்
பாய்ச்சுகின்ற நேரமிது

இனி ஆணுக்கு நிகராக… அல்ல
அதை விடவும் மேலாகச்
சாதித்துக் காட்டிச்
சரித்திரம் படைப்பது
நம் கடமை!

ஆணினத்தின் பலவீனமாம்
கொலை களவு காமம் மது
இவற்றில் பங்கு கேட்பதல்ல
நாம் கோரும் பெண்ணுரிமை!

ஆடைக் குறைப்பும்
அலங்கார மாற்றங்களும்
அடிமை விலங்கொடித்த
அறிகுறிகள் ஆகாது!

ஜான்ஸி ராணி முதற்கொண்டு
சானியா மிர்சா வரை
சாதனைகளால் மட்டுமே
நினைவு கொள்ளப்படுகிறார்கள்

என் செல்லமே…!
அறிவியல் அரசியல்
இலக்கியம் ஆன்மீகம்
இன்னும் பல துறைகளில்
பெண்கள் கோலோச்சும் போதுதான்
நாம் கொண்ட துயரங்கள்
நம்மை விட்டு விலகும்!

வறுமையில் வாடும் பாட்டியின்
வார்த்தைகளா இவையென
நீ வியப்பது புரிகிறது
அறிவுக்கு வறுமையில்லை
என் அன்புச் செல்லமே!

நாளைய நாடு
பெண்களால் மட்டுமே மலரும்
நம்பிக்கை கொள்
உன்னாலும் இந்த உலகம்
உயரப் போகிறது ஒரு நாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக