தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 மே, 2014

கவிதாஞ்சலி


(எனது மனைவியின் தாயார் திருமதி சகுந்தலா அவர்கள் 20.04.2014 அன்று தீ விபத்தில் காயமடைந்து 22.04.14 அன்று காலமாகிவிட்டர்கள். அவர்களது நினைவாக என்னுள் எழுந்த உண்ர்வுகள் இங்கு கவிதையாக.....)




பொல்லாத அந்த ஞாயிறை
ஏன் புலர வைத்தாய்
வெல்ல இயலாத விதியினை
வீட்டிற்குள் ஏன் வரவழைத்தாய்

அன்புற்றோர் அருகிலிருந்தால்
துன்புறுவர் என்றா
தனிமையில் இருந்தன்று
தணலுக்குள் மெழுகானாய்

பசியாற்றும் செயலே
பண்பெனக் கொண்டதனால்
தீயின் பசிக்கு உன்னைத்
தின்னக் கொடுத்தாயோ

வெந்தத் தேகத்திலும்
வேதனையை காட்டாது                                                          
சொந்தங்களின் சுகம் நாடி
சொர்க்கத்திற்குள் புகுந்தாயா

வேரிலே நீர்வார்த்து
விரிந்த ஆலமரத்தின்
விழுதுகளின் விழிகளை நீராக்கி
விரைந்து நீ எங்கு சென்றாய்

பாசமென்னும் நூல் எடுத்து
பண்பென்னும் மாலை தொடுத்து
பார் புகழ தந்துவிட்டு
பறந்து நீ எங்கு சென்றாய்


அயோத்தியின் நாயகனே அன்று
மனதிலே உனைச் சுமந்த
மாருதியின் வாலில்
தீச் சுடக் கண்டாய்
நெஞ்சிலே சுமந்த சீதையை
நெருப்பினில் குளிக்க செய்தாய்

இன்று
அன்றாடம் வழிபட்ட அன்னையை
அக்னிக்குள் அங்கம் கரைத்தாய்
தீராத அன்புற்ற உன் அடியாரைத்
தீக்கிரையாக்கும் தீயவனா நீ

உன்னவள் கண்ணீர் உகுத்தும்
இல்லற ஜோதியாய் இருந்தவளை
அருட் ஜோதியால் ஏன் அரவணைத்தாய்
அனைவரையும் பதற வைத்தாய்

உடல் தவிர்த்து உயரே நீ இருந்தாலும்
உன்னைத் தேடி ஓடிவரும்
ஒற்றை மரப் பறவைகள் நாங்கள்
என்றும் எப்பொழுதும் எக்கணமும்
மாறாத நினைவோடும் மணிவிழிகளில் நீரோடும்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக