தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 நவம்பர், 2010

ஸ்ரீ அனந்த நல்லூர் மாரியம்மன் ஸ்தோத்திரம்

அனந்த நல்லூர் என்ற சிற்றூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நன்னிலம் சாலையில் திட்டச்சேரி என்ற பேரூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது . இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாரியம்மன் இப்பகுதி மக்களின் கண்கண்டத் தெய்வமாகும். இம்மாரியம்மன் மீது சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஸ்தோத்திரம் இது. படித்துப் பயன்பெறுவதுடன் ஒருமுறை இவ்வாலயத்தையும் தரிசனம் செய்யுங்கள்.

காப்பு

முத்தான தமிழ் தன்னை மூதாட்டி அவ்வைக்கு

வித்தாகத் தந்தவனே விநாயகப் பெருமானே

பித்தாக நானிங்கே நல்லுர்ப் பெருமாட்டிதனை

பத்தாகப் பாடல் செய்ய பக்கம் துணை இருப்பாய்

1

வானமது ஊற்றாக வைகையது ஆறாக

தேனமரும் பூக்களது திருவிழா விளக்காக

திங்களது குடையாகத் தேன் ஈக்கள் பாட்டிசைக்க

மங்கலங்கள் சூழ்ந்திருக்க மாவிலைகள் வரவேற்க

தங்க நிறத் தாமரையாய் தேவிமுகம் சிரித்திருக்க

பொங்குகின்ற இன்பங்கள் புனலாகப் பெருக்கெடுக்க

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

எல்லோரும் இங்குற்ற ஏழ்மைத் துயர் நீக்கி

வல்லவராய் வாழ்வதற்கு வரமொன்று அளி(த்)தாயே

2

காணும் கனவெல்லாம் கருத்தாகி நின்று

தானும் நானுமென்னும் தன்னலம் போக்கி

வானும் மண்ணும் வயலும் வாழ்வும்

ஊணும் உயிரும் ஊடுருவிச் சென்று

நாணுரும் மங்கையின் நல்லெழில் கோலமாய்

நான் கண்ட தேவமகள் நல்லாட்சிப் புரிந்திட

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

பொல்லாதத் துயர்ப் போக்கி பொலிவுகள் பலவாக்கி

நல்லாராய் வாழ்வதற்கு நலமொன்றளி(த்)தாயே

3

சின்னஞ்சிறு பெண்ணாக செந்தமிழின் கண்ணாக

வண்ணமுறு நிலவாக வானத்து ஒளியாக

எண்ணமெங்கும் நிறைவாக ஏற்றந்தரும் கருவாக

தன்னலங்கள் தானொழிக்கும் தாரக மந்திரமாக

கண்மூடி துதிப்பவர்க்கு கலங்கரை விளக்காக

பெண்ணினத்தை காக்கின்ற பெரும் சக்தி வடிவாக

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

கல்லாரும் கற்றாரும் கொண்ட துயர் நீக்கி

செல்வராய் வாழ்வதற்கு செயதியொன்று அளி(த்)தாயே

4

கலியான காலமிதில் கல்லாக நில்லாமல்

ஒளியாக வந்திங்கு ஒயிலாக நடமாடி

தெளிவாக உணர்வோருக்கு தீந்தமிழ் சுவையாகி

எளிதாக எங்கும் இன்னருள் பொருளாகி

பொழிகின்றப் பொதிகைத் தென்றல் மழையாகி

மகிழ்வோடு எல்லோரும் உணர்கின்ற மாரியாகி

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

உள்ளமுடன் வணங்குகின்ற உனதருமை அன்பர்கள்

அல்லலின்றி வாழ்ந்திட ஆசியொன்று அளி(த்)தாயே

5

கார்மேக கூந்தல் கருணை மழைப் பொழிய

கால்களிரண்டும் கயவர்தம்மை கடிந்தொழிக்க

நீ கொண்ட கரங்களது நிதமருள் வழங்க

வான்கொண்ட திருமுகம் வண்ணத்தாமரையாய்

தேன்கொண்ட பூவாக தினம் நாடும் அன்பர்க்கு

பார்கொண்ட மாரியாக பரவசக் காட்சிதந்து

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

வல்லூறாய் வேதனைகள் வந்திங்கு ஏழையரை

கொல்லுகின்ற நிலை மாற்றி சொல்லொன்று அளி(த்)தாயே

6

முல்லையதுப் பாய்விரிக்க முகில்களங்கே குடைபிடிக்க

வெள்ளைமனம் கொண்டவர்கள் வீதியெல்லாம் நிறைந்திருக்க

எல்லையிலா அருள்மனமே எங்கெங்கும் சூழ்ந்திருக்க

கிள்ளைமொழி மாந்தர் கீதமது இசைத்திருக்க

தொல்லைதரும் பிணிகள் தூரத்தே மறைந்திருக்க

நல்லவர்கள் இங்கே நலமுடன் வாழ்ந்திருக்க

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

உள்ளாடும் உன் நினைவு உயிரோடு உறவாகி

எல்லோரும் இன்பமுற ற்றமளி(த்)தாயே

7

காத்தவராயன் காவலாய் நின்றிருக்க

பூத்த மலர்கள் பூமாலை தொடுத்திருக்க

சாத்திரம் படித்தவர் சரணமென்றிருக்க

தோத்திரம்பாடி தோரணங்கள் ஆட

பார்த்தவர் கண்களில் பைந்தமிழ் ஊற்றாக

வார்த்தெடுத்த வடிவாக வந்துதித்து இங்கே

வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

கள்ளூறு மலராக கருணை மழைதான் பொழிந்து

வெல்லுகின்ற வழியொன்று விரைந்தளி(த்)தாயே

8

வங்கக் கடல் தாண்டி வணங்குபவர்தனை நோக்கி

சிங்கை நகர் சென்று செய்தி பல சொல்லி

மங்கை உன்னுருவை மானிடர்க்குக் காட்டி

உங்கள் துயர் தீர்க்கும் உமையவள் நானே

எங்கும் நிறைந்திருக்கும் சக்தியும் நானேயென்று

பொங்கும் உவகையோடு புரிய வைத்திங்கு

வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

வல்லவர்கள் வறியவர்களை வதைக்கின்ற நிலை மாற்றி

நல்லவராய் வாழ்வதற்கு நகையொன்று அளி(த்)தாயே

9

இரவோடுப் பகலாக எந்நேரமும் நினைவாக

உறவோடு உயிராக உள்ளத்துக் கனவாக

மறவாத நெஞ்சமிதில் மாரியென்னும் பெயராக

இறவாத இயற்கையின் எழிலரசி கோலமாக

வரவாக்கி இன்பமதை வாழ்வது வளமாக

உருவாக்கி தந்து இங்கு உமையாகி நின்று

வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

பல்லாண்டு இங்கே பக்தர்கள் வாழ்ந்திருக்க

எல்லாமும் தந்து ற்றமளி(த்)தாயே

10

கொநதை அரங்கனிவன் நல்லூர்ப் பாடல்களை

சித்தமுடன் பாடுகின்ற செந்தமிழ் வல்லார்

இத்தரையில் இன்பமுடன் எல்லாமும் பெற்று

உத்தமமாய் வாழ்ந்திருக்க உமையாகி நீயங்கே

வில்லோடு விழி காட்டி விழியாலே அருள் கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கயர்க்கரசியே

நல்லத் தமிழ் கவிதை இதை சொல்பவர்க்கு காவேரி

வெள்ளமென நன்மைகளை விரைந்தளி(த்)தாயே

------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக